பெண்கள் உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

பெண்கள் உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
பெண்கள் உலகக்  கோப்பை: இந்தியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

பெண்கள் உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. யாஸ்திகா பாட்டியா 59 ரன்களும், மிதாலி ராஜ் 68 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 57 ரன்களும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து  278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, இந்தியாவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு சீராக ரன் சேர்த்தனர். இதனால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில், கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆஸ்திரேலியா அணி 280/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மெக் லானிங் 107 பந்துகளில் 97 ரன்களும், அலிசா ஹீலி 65 பந்துகளில் 72 ரன்களும் குவித்தனர். மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது 5 ஆட்டங்களிலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் பிடித்து, முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.  

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில், 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: 200-வது ஒருநாள் போட்டி - சாதனை படைத்த இந்திய வீராங்கனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com