”ஒரே ஒரு ஓவர்தான் எல்லாம் போச்சு! ஒரு மாசம் சொல்லி சொல்லி அழுதேன்”-இஷாந்த் பகிர்ந்த போட்டி

”ஒரே ஒரு ஓவர்தான் எல்லாம் போச்சு! ஒரு மாசம் சொல்லி சொல்லி அழுதேன்”-இஷாந்த் பகிர்ந்த போட்டி
”ஒரே ஒரு ஓவர்தான் எல்லாம் போச்சு! ஒரு மாசம் சொல்லி சொல்லி அழுதேன்”-இஷாந்த் பகிர்ந்த போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது மோசமான பந்துவீச்சால், தான் ஒரு மாதம் அழுததாக இஷாந்த் சர்மா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் மொகாலியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 304 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என நினைத்த நேரத்தில் இஷாந்த் சர்மா வீசிய ஒரு ஓவர் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு 3 ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இஷாந்த் சர்மா ஒரே ஓவரில் 30 ரன்கள் வாரி வழங்கினார். அவரது ஓவரை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னர் நான்கு சிக்ஸர்களை பறக்க விட்டார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு இஷாந்த் சர்மாவின் மோசமான பந்துவீச்சே காரணம் என பரவலாக விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில், கிரிக்பஸ் தளம் நடத்திய ரைஸ் ஆஃப் நியூ இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இஷாந்த் ஷர்மா, 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டி தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான நேரம் என குறிப்பிட்டுள்ளார். ’இதைவிட என் கேரியரில் மோசமான நேரம் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்’ எனவும் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.  

”அந்தப் போட்டியில் நான் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால் இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் நான்  என்னுடைய வருங்கால மனைவியுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசியில் அவருடன் பேசும்போதெல்லாம் இதைப்பற்றி பேசி அழுதேன். கிட்டதட்ட நான் ஒரு மாதமாக அழுது கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

ஆனால், “அந்தப் போட்டிக்குப் பிறகு தோனி மற்றும் தவான் என்னுடைய அறைக்கு வந்து நான் நன்றாக விளையாடுவதாக சொல்லி உற்சாகப்படுத்தினார்கள். அந்த ஒரு போட்டியினால் நான் ஒருநாள் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர் அல்ல என்ற ஒரு பார்வை என்னைச் சுற்றி உருவானது” எனவும் இஷாந்த் சர்மா கூறியுள்ளார். 

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய 34 வயதான இஷாந்த் சர்மா கடைசியாக இந்திய அணிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியிலிருந்து இஷாந்த் சர்மா ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஷாந்த் சர்மா 105 டெஸ்ட் போட்டியில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 80 ஒருநாள் போட்டியில் 115 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், 93 ஐபிஎல் போட்டிகளில் 72 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com