வார்னர் அதிரடியால் 212 ரன்கள் குவித்த ஹைதராபாத்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 212 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் சாஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 (13) ரன்களில் சாஹா வெளியேற, வார்னர் அதிரடியை தொடர்ந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே சற்று பொறுமையாக விளையாடி 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அதிரடியை குறைக்காமல் பேட்டிங் செய்த வார்னர் 81 (56) ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் நபி சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் 18வது ஓவரிலேயே 200ஐ நெருங்கியது. பின்னர் 18.2 -வது பந்தில் ஷமி வீசிய பந்தில் வில்லியம்சன் 14 (7) ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார்.
பின்னர் அதே ஓவரில் முகமத் நபியும் 20 (10) ரன்களில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.