ஐ.எஸ்.எல் தொடரின் அரையிறுதியில் சென்னையின் எஃப்சி அணியும், கோவா அணியும் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதியை எட்ட சென்னை அணி கடந்து வந்த பாதையை சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.
தொடர் தோல்விகள் துரத்தினாலும் நம்பிக்கை இழக்காமல் போராடி, வெற்றிப் பாதைக்கு திரும்புவதே சிறந்த அணிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் சென்னை அணியோ, தோல்விகளின் பிடியிலிருந்து விடுபட்டதோடு மட்டுமின்றி அரையிறுதிக்கே முன்னேறி வியக்க வைத்திருக்கிறது. கடந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம்தான் கிடைத்தது. நடப்பு சீசனிலும், சென்னை விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது.
அதனால், சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகோரி அதிரடியாக நீக்கப்பட்டு, ஓவன் காய்ல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கால்பந்து விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சென்னை அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்றே கருதினர். ஆனால் "எதுவம் சாத்தியம்" என்கிற எண்ணத்தில், மனம் தளராமல் பயணத்தை தொடர்ந்தனர் சென்னை அணி வீரர்கள். ஓவன் காய்லின் பயிற்சியின் கீழ் களம் கண்ட சென்னை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பியது. குறிப்பாக, தொடர்ச்சியாக விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றிக் கண்டும், ஒரு ஆட்டத்தை டிரா செய்தும் அசத்தியது சென்னை அணி.
அரையிறுதிக்கு முன்னேற மேலும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்ற நிலையில், பலமான மும்பை அணியை வீழ்த்தியது சென்னை. கோப்பையை வெல்லும் பயணத்தில், தொடக்கத்தில் தொய்வு ஏற்பட்டாலும், கடைசியில் வீறு நடைபோட்டு அரையிறுதிக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்சி. இதுவரை இரண்டு முறை ஐ.எஸ்.எல் கோப்பையை வசப்படுத்தியுள்ள சென்னை அணி, நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என நம்பலாம்.