\
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்!
Published on

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருக்கு தகுதிச் சுற்று மூலம் ஹாங்காங் அணி வாய்ப்புப் பெற்றுள்ளது.

14-வது ஆசியக் கோப்பைப் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. 

தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தகுதிச்சுற்றுக்கான இறுதிப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. ஹாங்காங் அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணியும் மோதின. மழை காரணமாக 24 ஓவர்களாக குறைக் கப்பட்டது.

முதலில் பேட் செய்த ஐக்கிய அமீரக அணி 24 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஷப் அகமது 79 ரன்கள் எடுத்தார். ஹாங்காங் தரப்பில் ஆஜஸ்தான் 5 விக்கெட்டுகளையும், நதீம் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 23.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அணி வரும் 16-ம் தேதி நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணியுடன் 18 ஆம் தேதி மோதுகிறது.

இந்த தொடரில், இந்திய அணியில் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com