இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆக்ரோஷமாக பேட் செய்து ரன் குவிப்பவர். சமயங்களில் அந்த ஆக்ரோஷமே அவரது ரன் குவிப்பை அணை போட்டு தடுத்து விடுகிறது. அண்மையில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டாகி இருந்தார் பண்ட்.
இந்த நிலையில் அது குறித்து அவரிடம் நிச்சயம் பேசப்படும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.
“ரிஷப் பண்ட் பாஸிட்டிவாக விளையாடக் கூடியவர் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். அவர் ஒரு குறிப்பிட்ட பாணியில் விளையாடி, அதன் மூலம் ரன் குவித்தும் வருகிறார். அது அவருக்கு வெற்றியையும் கொடுத்துள்ளது. இருந்தாலும் அவரது இயல்பான ஆட்டத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாத வகையில் அவரிடம் அது குறித்து பேசுவோம். அது அவரது ஷாட் செலக்ஷன் குறித்து இருக்கும். எந்த நேரத்தில் எந்த ஷாட் விளையாடினால் சரியாக இருக்கும் என அவரிடம் சிறிதளவு பேசுவோம்.
அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தை கைவிடுமாறு அவரிடம் யாரும் சொல்ல போவதில்லை” என தெரிவித்துள்ளார் டிராவிட்.