பாகிஸ்தான் தோல்விக்கு ஹசன் அலி தவறவிட்ட கேட்ச் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. வெற்றி பெற கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதை இரண்டே ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது ஆஸி.
அதில் 19-வது ஓவரின் மூன்றாவது பந்தில் மேத்யூ வேட், மிட் விக்கெட் திசையில் பந்தை அடிக்க அது அங்கு ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கையில் தஞ்சமடைந்தது. இருந்தும் இக்கட்டான அந்த சூழலில் அந்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார் அவர். அதை தனக்காக லைஃப்பாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து மூன்று சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்தார் வேட்.
பாகிஸ்தான் தோல்விக்கு ஹசன் அலி தவறவிட்ட கேட்ச் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்த அணி இந்த ஆட்டத்தில் செய்த சில தவறுகள் தான் தோல்விக்கு காரணம். தனி ஒரு வீரர் மீது பழி சொல்ல முடியாது. இந்நிலையில் ஹசன் அலி தான், பாகிஸ்தான் அணியின் பலவீனம் என சொல்லியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
“பிரஷர் காரணமாக நல்ல ஃபீல்டர்கள் கூட கேட்ச் பிடிக்க தவறுவார்கள். ஆனால் ஹசன் அலி, பாகிஸ்தான் அணியின் பலவீனம். அவர் சரியாக பந்துவீசவில்லை. பேட்டிங் எப்படி என்று தெரியவில்லை. இந்த தொடரில் சில முறை மிஸ் ஃபீல்ட் செய்துள்ளார் அவர். சில நேரங்களில் பலவீனமான வீரர்கள் இருப்பது உண்டு. இந்த முறை பாகிஸ்தானுக்கு அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் ஹசன்” என தெரிவித்துள்ளார்.