பிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி!

பிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி!

பிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி!
Published on

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ்! அந்த அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே-வை வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 52 வது லீக் போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி டேர்டெவில்ஸும் மோதின. சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதாலும் டெல்லி அணி அடுத்தச் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டதாலும் இது சம்பிரதாயப் போட்டிதான். இருந்தாலும் இரு அணி வீரர்களும் களத்தில் கடுமையாகப் போராடினர்.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் டேவிட் வில்லே நீக்கப்பட்டிருந்தார். டெல்லி அணியில் ஜாசன் ராய், ஜூனியர் டாலா ஆகியோருக்கு பதிலாக மேக்ஸ்வெல், அவேஷ் கான் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு, சென்னை பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நெருக்கடி கொடுத்தனர். பிருத்வி ஷா 17 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்டும் இணைந்து அடித்து ஆடினர். 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.

 இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ஒரே ஓவரில் அடுத்தடுத்து பிரித்தார். ஐயர் 19 ரன்னிலும், ரிஷாப் 38 ரன்னிலும் வெளியேறினர். 16 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் தடுமாறிய அந்த அணி 140 ரன்களைக் கூட தொடாது என்றே நினைத்தனர். ஆனால், விஜய் சங்கரும் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேலும் அந்த நினைப்பை தவிடு பொடியாக்கினர். 

டெத் ஓவர் எனப்படும் கடைசிக்கட்ட ஒவர்களில் யாரும் சரியாக பந்துவீசுவதில்லை என்று கேப்டன் தோனி தொடர்ந்து கூறிவருகிறார். அவர்களை சாடியும் வருகிறார். அதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்றும் அது நடந்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் 3 சிக்சரும், விஜய் சங்கர் ஒரு சிக்சரும் விளாசி ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். முதல் 3 ஓவர்களில் 26 ரன்கள் வழங்கிய பிராவோ கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்களை அள்ளிகொடுத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களைக் கொடுத்தார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. ஹர்ஷல் பட்டேலும் விஜய் சங்கரும் தலா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் நிகிடி 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஜடேஜா, தாகூர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி இறங்கியது. வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்தனர். வாட்சன் 14 ரன்களில் அமித் மிஸ்ரா சுழலில் எல்லைக்கோட்டின் அருகே போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ’சின்னத் தல’ சுரேஷ் ரெய்னா முதல் பந்திலேயே அவுட்டில் இருந்து தப்பினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராயுடு அரைசதத்தை நிறைவு செய்தார்.

அணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டிய போது ராயுடு 29 பந்துகளில் 50 ரன் எடுத்து வெளியேற தடுமாற்றம் தொடங்கியது சென்னை அணிக்கு. சுரேஷ் ரெய்னா 15 ரன்னிலும் சாம் பில்லிங்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆக, அடுத்து கேப்டன் தோனியும் ஜடேஜாவும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சு  அருமையாக இருந்தது. இதனால் சிஎஸ்கேவால் ரன்களை குவிக்க முடியவில்லை. தோனி 17 ரன்னிலும் பிராவோ 1 ரன்னிலும் அவுட் ஆக, சிஎஸ்கே ஆட்டம் முடிவுக்கு வந்தது. சென்னை அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜடேஜா 27 ரன்களுடம் சாஹர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி தரப்பில் போல்ட், அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டையும் சந்தீப் லாமிச்சனே, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

16 பந்தில் 36 ரன்களும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய டெல்லி அணியின் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com