"கொரோனா பரிசோதனை முடிவை ஹபீஸ் ட்விட்டரில் பகிர்ந்திருக்க கூடாது" அக்தர் காட்டம் !

"கொரோனா பரிசோதனை முடிவை ஹபீஸ் ட்விட்டரில் பகிர்ந்திருக்க கூடாது" அக்தர் காட்டம் !
"கொரோனா பரிசோதனை முடிவை ஹபீஸ் ட்விட்டரில் பகிர்ந்திருக்க கூடாது" அக்தர் காட்டம் !

கொரோனா பரிசோதனை முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கக் கூடாது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று திட்டமிட்டப்படி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள புறப்பட்டுச் சென்றது. இந்தப் பயணத்துக்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களின் உடல்தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்காக, 35 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அறிக்கை வாயிலாக தெரிவித்தது.

ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, சதாப் கான் ஆகிய மூன்று பேருக்கும் ஏற்கெனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், ஃபக்கர் ஸமான் உள்ளிட்ட மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை எனக் கூறப்பட்டது.

நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் 25 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படுவார்கள். சில நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும். முழுவதும் குணமடைந்து இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய வீரரான முகமது ஹபீஸ்க்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில், அவர் தாமாக முன் வந்து குடும்பத்துடன் கொரோனா பரிசோதனையை மீண்டும் மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படவில்லை என கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய பரிசோதனையில் கொரோனா உறுதி என வந்தது. இதனையடுத்து என்னுடைய மனதிருப்திக்காக குடும்பத்துடன் மீண்டும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில் நான் உள்பட என் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படவில்லை. கடவுளுக்கு நன்றி" என தெரிவித்திருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் இங்கிலாந்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முகமது ஹபீஸ் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தன்னுடைய கருத்தை யூடியூபில் தெரிவித்துள்ளார்.

அதில் "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் சொதப்பிவிட்டதாகவே தோன்றுகிறது. அனைத்து வீரர்களுக்கும் கொரோனா சோதனை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட லாகூர், கராச்சியில் இருந்து வரும் வீரர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யலாம். நீங்கள் தொடர்ந்து சோதனை செய்ய செய்ய கொரோனா பாசிடிவ்தான் வந்துக்கொண்டிருக்கும். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com