டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அன்போடு அழைக்கப்படுபவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ். கடந்த 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் அப்போது முதலே அவரது ஓய்வு முடிவை கைவிடுத்து மீண்டும் சர்வதேச களத்திற்கு தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வர வேண்டுமென்ற கோரிக்கை அவர் முன் வைக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
அதற்கு காரணம் அவரது ஆட்டம் மற்றும் ஃபிட்னெஸ். வரும் அக்டோபரில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.
“டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை. ‘எனது ஓய்வு முடிவு இறுதியானது’ என அவர் சொல்லி விட்டார். அதனால் அவர் சர்வதேச களத்திற்கு மீண்டும் விளையாட வர மாட்டார். அவர் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை” என கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
அவரது கம்பேக் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பட்சர், டிவில்லியர்ஸ் உடன் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.