எதிர்வரும் 2022 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இணைந்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர்.
தற்போது டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங். அவரது பார்வையில் அகர்கர் துணை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். மற்றொரு துணை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் பெயரும் சொல்லப்பட்டு வருகிறது. இருந்தாலும் அது இன்னும் உறுதியாகவில்லை.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் அகர்கர் விளையாடியுள்ளார். 2008 முதல் 2013 வரையில் 42 ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். அவர் டெல்லி அணிக்கு பவுலிங் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. “டெல்லி அணியுடன் இணைந்து இந்த சீசனில் பணியாற்ற உள்ளதை எண்ணி நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான பண்ட் தலைமையிலான இளம் அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி” என அகர்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக இந்த சீசனில் செயல்படுவார் என தெரிகிறது. கடந்த மூன்று சீசன்களாக டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளது. அதில் 2020 சீசனில் இறுதி போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.