இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (77) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மும்பையில் காலமானார். அஜித் வடேகர் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல விதத்தில் வரலாற்று நாயகன். ஆம், இவர் தலைமயிலான இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வெற்றிகளை ஈட்டியவர்.
பட்டோடிக்கு பிறகு 1970-களில் இந்திய அணியின் கேப்டனாக பொறுபேற்ற வடேகர் அணியை திறம்பட வழிநடத்தி சென்றதோடு அல்லாமல் சிறந்த இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்லிப் பீல்டராகவும் வலம் வந்தவர். 1964 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ரன்களை குவித்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை அஜித் வடேகர் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகள் அறிமுகமான பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் கேப்டனாக இருந்த பெருமைக்குறியவர் அஜித் வடேகர். இந்திய அணியை பொறுத்தவரை முதல்முதலில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக பலராலும் அறியப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்தார். அஜித் வடேகர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அவருக்கு இறங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் "அஜித் வடேகரின் சாதனைகள் எப்போதும் போற்றப்படும். சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்மல்லாமல் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலை சிறந்த கேப்டனாக இருந்தவர். மேலும், கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் திறம்பட செயலாற்றியவர். அவரின் மறைவு செய்திக் கேட்டு துயரமடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.