துடிப்புமிக்க ஆட்டம், விவேகமான பாய்ச்சல், இரு கால்களில் விந்தைகள் புரியும் நுட்பம், தலைமைத்துவம் உள்ளிட்டவற்றால் உலகமெங்கும் பல கோடி ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார் ரொனால்டோ. ரியல் மேட்ரிட் கிளப்பில் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய ரொனால்டோ அந்த அணியின் ஆணி வேராகவே திகழ்ந்தார். கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜாம்பவான்களில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டவர் போர்ச்சுக்கல்லின் போராட்ட குணம் மிக்க வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது 18ஆவது வயதில் தேசிய சீனியர் அணியில் தடம் பதித்த ரொனால்டோவை, 2003 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனியர் கிளப் அணிகளில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்து கொண்டது. TEENAGE வீரர்களிலேயே பெருந்தொகைக்கு ஒப்பந்தமானவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் ரொனால்டோ.