சிட்னி டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கும் ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறையாக ஆடவர் டெஸ்ட் போட்டியில் பெண் நடுவராக ஆஸ்திரேலியாவின் கிலாரே போலோசாக் களம் இறங்க உள்ளார். ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடுவர்களாக ஆண்களே இதுவரை இருந்துவந்தனர். இதற்கு மாறாக தற்போது முதல் முறையாக ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பெண் நடுவராக செயல்படவுள்ளார். இந்த போட்டியில் நான்காவது நடுவராக கிலாரே போலோசாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான அவர் கடந்த 2019இல் ஐசிசி நடத்திய டிவிஷன் 2 லீக் ஆண்கள் ஒருநாள் ஆட்டத்தில் கள நடுவராக செயல்பட்டுள்ளார். Paul Reiffel மற்றும் Paul Wilson சிட்னி டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களாக செயல்பட உள்ளனர். Bruce Oxenford இந்த போட்டியில் டிவி நடுவராக செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிசி கொண்டு வந்த புதிய விதியின் படி நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த கிலாரே போலோசாக்கை தொடரை நடத்தும் அம்பயராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. புதிய பந்தை எடுத்து வருவது, ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கள நடுவர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொண்டு செல்வது, கள அம்பயர்களுக்கு போட்டியின்போது அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் டிவி அம்பயர் பொறுப்பை ஏற்றுக் கொள்வது தான் நான்காவது நடுவரின் பணி.