2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியை எந்த நாடு நடத்தப்போகிறது என்பது இன்று தெரிய வரும். இதற்கான வாக்கெடுப்பை உலகக் கால்பந்தாட்ட சம்மேளனமான பிஃபா இன்று மாஸ்கோவில் நடத்துகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வாய்ப்பு பிஃபா பொதுக்குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி வழங்கப்படும். போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், செலவிடும் தன்மை போன்றவற்றை பொருத்து வாய்ப்பு கிடைக்கும். வரும் 2022-ஆம் ஆண்டு போட்டி கத்தாரில் நடக்கிறது.
2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த மொராக்கோவும், அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்துள்ளன. வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த வாக்கெடுப்பு புதன்கிழமை மாஸ்கோவில் நடக்கவுள்ள பிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நடக்கிறது. உறுப்பினர்களாக உள்ள 207 நாடுகள் இதில் வாக்களிக்க உள்ளன. ஏற்கெனவே பிஃபா ஆய்வுக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் பல்வேறு அம்சங்கள் வட அமெரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.