FIFA 2026 | கால்பந்து திருவிழாவுக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் அதிசயங்கள்!
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில் அதில் அதிநவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுவாக, கால்பந்து என்றால் அது காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படும் கால்பந்தை காற்றால் நிரப்புவதுடன் சார்ஜும் செய்யவேண்டும்.
ஏனெனில், களத்தில் துல்லியமாக முடிவுகளை எடுக்க கால்பந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள மோஷன் சென்சார்கள் உதவுகின்றன. இதன்மூலம் பந்தை வீரர்கள் கையால் தொட்டாலோ... கோட்டை பந்து கடந்ததா என்பது போன்ற தகவல்கள் துல்லியமாக நடுவருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். கால்பந்து போட்டிகளில் எப்போதும் சர்ச்சையை உருவாக்கும் ஆஃப்சைடு விதியில் எளிதில் தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் விளையாடும் 1,248 வீரர்களின் உடல் அமைப்பும் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தின் எல்லையில் உள்ள ஏஐ கேமராக்கள் வீரர்களின் ஒவ்வொரு சிறு அசைவையும் முப்பரிமாணத்தில் படம் பிடிக்கும். பந்து எப்போது உதைக்கப்பட்டது என்று பந்தின் சென்சார் தரவும், அந்த மில்லி- விநாடியில் எதிரணி வீரர் எங்கு நின்றுகொண்டிருந்தார் என்ற கேமரா தரவும் கணினியில் நொடிப் பொழுதில் ஒன்றிணைக்கப்படும்.
இதன்மூலம் ஆஃப்சைடு முடிவுகள் சில விநாடிகளிலேயே எடுக்கப்பட்டு நடுவருக்குத் தெரிவிக்கப்படும். போட்டிகளில் இயல்பாக ஏற்படும் மனிதத் தவறுகள் மிகப்பெரிய அளவில் தவிர்க்கப்படும். டிரியோண்டா என்ற பெயருள்ள இப்பந்து வெறும் நகரும் பொருளாக மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அதிசயமாகவும் மாறியுள்ளது. தற்போதைய உலகக்கோப்பை தொடர் வெறும் பொழுதுபோக்கான போட்டியாக மட்டுமல்லாமல் அறிவுசார் விளையாட்டுத் திருவிழாவாகவும் மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல.

