மைதானத்துக்குள் சென்று தோனியின் காலைத்தொட்டு வணங்கிய ரசிகர்
இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனியின் காலை ரசிகர் ஒருவர் தொட்டு வணங்கிய சம்பவம் நடந்துள்ளது.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. போட்டியின் இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யாவுடன் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் போடப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ரசிகர் ஒருவர் வீரர்கள் விளையாடும் பகுதிக்குள் நுழைந்தார். பிட்சை நோக்கி ஓடிவந்த அந்த ரசிகர், அங்கு நின்றிருந்த தோனியின் காலைத் தொட்டு வணங்கினார். மேலும், தோனியுடன் அந்த ரசிகர் கைகுலுக்கவும் செய்தார். அவரைத் துரத்தி வந்த மைதான பாதுகாவலர்கள் பாதுகாப்பாக மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. நாற்பது பந்துகளைச் சந்தித்த தோனி, 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.