சர்ச்சைக்குள்ளான நோ-பால் அறிவிப்பு - ‘பைஸ்’ மூலம் 3 ரன்கள் கிடைத்தது எப்படி?

சர்ச்சைக்குள்ளான நோ-பால் அறிவிப்பு - ‘பைஸ்’ மூலம் 3 ரன்கள் கிடைத்தது எப்படி?
சர்ச்சைக்குள்ளான நோ-பால் அறிவிப்பு - ‘பைஸ்’ மூலம் 3 ரன்கள் கிடைத்தது எப்படி?

நவாஸ் வீசிய 'ஃப்ரி-ஹிட்' பந்தில் விராட் கோலி போல்ட் ஆனபோதும் பந்து 'டெட்' ஆகாத காரணத்தால் ‘பைஸ்’ மூலம் 3 ரன்கள் கிடைத்தன.

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 'சூப்பர் 12' சுற்றுப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இதனால் வழக்கம்போல் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் என்கிற இலக்கை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றிகரமாக விரட்டிப் பிடித்தது இந்திய அணி. 53 பந்துகளில் 82 ரன்களை குவித்தது மட்டுமில்லாமல், கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தி்ல் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் விராட் கோலி.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீசிய கடைசி ஓவர் மறக்க முடியாததாக இருந்தது. இந்த  ஓவரில் இந்திய வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் ‘ஸ்பின்னர்’ நவாஸ் பந்து வீசினார். முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால், இந்தியா வெற்றிபெற 5 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைமை உருவானது. ஐசிசி வெளியிட்ட புதிய விதிகளால் விராட் கோலி நான்-ஸ்டிரைக்கிங் பகுதியிலேயே நிற்க வேண்டியதாகிவிட்டது. இதனால் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கடைசி ஓவரின் 2வது பந்தை சந்தித்தார். அவர் அந்த பந்தில் 1 ரன் எடுத்தார். 3வது பந்தை சந்தித்த கோலி 2 ரன்கள் எடுத்தார்.

4வது பந்தை நவாஸ் நோ-பாலாக வீச அந்த பந்தை விராட் கோலி சிக்சருக்கு விளாசினார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை நோ-பால் என கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தும் பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து 'ஃப்ரி-ஹிட்' முறையில் 4வது பந்தை மீண்டும் வீசும் சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் 4வது பந்து வீச அது ஓய்ட் ஆக அறிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் 'ஃப்ரி-ஹிட்' பந்து வீச கோலி போல்ட் ஆனார். ஆனால், ஃப்ரி-ஹிட் பந்தில் அவுட் கிடையாது என்பதால் ‘பைஸ்’ மூலம் கோலி 3 ரன்கள் ஓடினார்.  இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் நடுவர்களிடம் வந்து அந்த பந்தை டெட் பால் என அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் ஐசிசி விதிகளின் படியே முடிவு எடுக்கப்பட்டதாக கள நடுவர்கள் தெரிவித்தனர்.

ஐசிசி விதிப்படி ஒரு 'ஃப்ரி-ஹிட்' பந்து வீசி முடிக்கப்பட்டு கீப்பர் அல்லது பந்துவீச்சாளரிடம் வரும்பொழுது அந்தப் பந்து 'டெட்' ஆகிவிடும். அல்லது பவுண்டரி, சிக்சர் அடிக்கும்போது டெட் ஆகும். இவை அல்லாமல் ரன்அவுட், ஸ்டெம்பிட் தவிர்த்து என்ன நடந்தாலும் பேட்ஸ்மேன் ரன் எடுக்கலாம். இந்த விதிகளின் படிதான் விராட் கோலி நவாஸ் வீசிய 'ஃப்ரி-ஹிட்' பந்தில் போல்ட் ஆனபோதும் பந்து டெட் ஆகாத காரணத்தால் ‘பைஸ்’ மூலம் 3 ரன்கள் கிடைத்தன.

பின்னர், 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரின் 5வது பந்தை சந்தித்த தினேஷ் கார்த்திக் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் அஸ்வின் களமிறங்கினார். நவாஸ் வீசிய கடைசி பந்து ஒயிட் ஆக அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா 159 ரன்களை எட்டி பாகிஸ்தான் அணியின் ரன்னை சமன் செய்தது. ஒயிட் வீசப்பட்டதால் கடைசி பந்து மீண்டும் வீசப்பட்டது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் பந்தை மிட்ஆன் திசைக்கு அஸ்வின் விளாசி 1 ரன் ஓடினார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ரன்னை இந்தியா எட்டியது. அதன்படி பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரன் சேஸ் - சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com