இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், களநடுவரின் தவறான முடிவே தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த ஓவரை பும்ரா சிறப்பாக வீசினார். கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் களநடுவரின் தவறான முடிவே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார். பும்ரா வீசிய கடைசி ஓவரில், பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பட்டதை கவனிக்காமல், நடுவர் சாம்ஷுதின் அவுட் கொடுத்தது ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டதாகக் கூறினார். களநடுவரின் இந்த செயல்பாடு குறித்து, போட்டி நடுவரிடம் முறையிட உள்ளதாக கூறிய மோர்கன், கிட்டத்தட்ட 40 பந்துகளை சந்திருந்திருந்த ரூட் களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரியாக மாறியிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை மறுதினம் பெங்களூருவில் நடைபெறுகிறது.