இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயன் மோர்கன் அந்நாட்டு கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். 2015இல் இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மோர்கன். 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்று சரித்திரம் படைத்த்து.
சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் தலைமை தாங்கி 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டனாக திகழ்கிறார். 248 ஒருநாள் போட்டிகளில் 7,701 ரன்களையும் 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2 சதம், ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதம், டி20-யில் 14 அரை சதம் அடித்துள்ளார்.
இந்நிலையில் 35 வயதே ஆன இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே உடற்தகுதி மற்றும் ஃபார்ம் இல்லாமல் தவித்துவந்த மோர்கன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில் மோர்கனின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் #ThankYouEoinMorgan என்ற ஹேஸ்டேக்கில் அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக ஜோஸ் பட்லர் கேப்டன் ஆக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிக்கலாம்: ‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்