ஆர்ச்சர், மார்க் வுட் மிரட்டல் - 232 ரன்களில் சேர்த்த இலங்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 232 ரன்கள் எடுத்தனர்.
உலகக் கோப்பை தொடரின் 27வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியில், தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கருனரத்னே 1 (8) ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து குசல் பெராரா 2 (6) ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார்.
இதனால் இலங்கை அணி தடுமாறியது. பின்னர் வந்த ஃபெர்னாண்டோ அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஆனாலும் 49 (39) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த அரை சதத்தை தவறவிட்டார். அவரைப்போன்றே குசால் மெண்டீஸ் 46 (68) ரன்களில் ஆட்டமிழந்து அரை சதத்தை எட்டாமல் சென்றார்.
பின்னர் வந்த மேத்தீவ்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 (115) ரன்களை குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்தில் அணி சார்பில் பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.