கோலிக்கு முன் இறங்கிய ரகானே - காரணம் இதுதான் !
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதலில் தடுமாறினாலும் வோக்ஸ், பெர்ஸ்டோவ் அபார ஆட்டத்தால் 396 ரன்கள் குவித்தது. வோக்ஸ் 137 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முரளி விஜய் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். முரளி விஜயை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 10 ரன் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 17 ரன்னிற்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.
இந்தத் தொடரில் 4வது விக்கெட்டுக்கு இதுவரை விராட் கோலி தான் களமிறங்கி வந்தார். ஆனால், இந்த இன்னிங்சில் கோலிக்கு பதிலாக ரகானே களமிறங்கினார். இதற்கு காரணம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிய போது களத்தில் கோலி 37 நிமிடங்கள் இல்லை. அதனால், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் 37 நிமிடங்களுக்கு பிறகு தான் களமிறங்க முடியும். ஒரு வேளை அதற்குள் விக்கெட்கள் விழாமல் இருந்திருந்தால், விராட் கோலி வழக்கம் போல் 4வது வீரராகவே களமிறங்கி இருப்பார். ஆனால், முரளி விஜய், கே.எல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால், ரகானே முன்னதாக களமிறங்கப்பட்டார்.