இங்கிலாந்து த்ரில் வெற்றி ! கண்ணீருடன் விடைபெற்ற கொலம்பியா

இங்கிலாந்து த்ரில் வெற்றி ! கண்ணீருடன் விடைபெற்ற கொலம்பியா
இங்கிலாந்து த்ரில் வெற்றி ! கண்ணீருடன் விடைபெற்ற கொலம்பியா

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் நேற்றைய நாக் அவுட் ஆட்டத்தில் இங்கிலாந்து 4-3 என்று பெனால்டி ஷூட் அவுட் முறையில் கொலம்பியா அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து, காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போது வரை 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதில் ரஷ்யா, உருகுவே, பிரான்ஸ், குரேஷியா, பிரேசில், ஸ்வீடன், பெல்ஜியம், இங்கிலாந்து  ஆகியவை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பை நாக் அவுட்டில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் முதலாவது போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வெற்றிக்கொண்டது. இதனையடுத்து இங்கிலாந்து - கொலம்பியா இடையிலான இரண்டாவது போட்டி இரவு 11.30 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. இங்கிலாந்தை விட கொலம்பியா மிகச் சிறப்பாக விளையாடியது. ஆனால் இங்கிலாந்து வீரர்கள் அந்த அணி கோல் அடிப்பதை தொடர்ந்து லாவகமாக தடுத்து வந்தனர்.

கோல் ஏதும் இல்லாமல் முதல் பாதி முடிந்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோலடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் 6 வது கோலை அடித்து, அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஹாரி கேன் உள்ளார். 

இதன் பின் கொலம்பியாவின் மினா கோலடிக்க 1-1 என ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோலடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

 இதில் 4-3 என இங்கிலாந்து வென்றது. கொலம்பியாவின் பால்கோ, குவாடிராடோ, முரேல் ஆகியோர் கோலடிக்க, யூரிஃப், பக்கா கோலடிக்கத் தவறினர். இங்கிலாந்தின் கேன், ரேஷ்போர்ட், டிரிப்பர், எரிக் டயர் ஆகியோர் கோலடிக்க, ஹென்டர்சன் கோலடிக்கத் தவறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com