சென்னை டெஸ்ட்: இங்கிலாந்து 360 ரன்கள் முன்னிலை!
சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருக்கிறது. இதனையடுத்து அந்த அணி 360 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். இந்தியத் தரப்பில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்பு மற்றொரு தொடக்க வீரரான டோம் சிப்லேவையும் அவுட் செய்தார் அஸ்வின்.
இதனையடுத்து ஜோ ரூட்டும் , லாரண்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி விரைவாக ரன்களை சேர்க்க முயற்சித்தபோது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட் கோலி. இதில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லாரண்ஸ் அவுட்டானார். இதில் ஜோ ரூட் தொடர்ந்து விளையாடி 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னில் வெளியேறினார்.
இந்திய தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நான்காம் நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் இங்கிலாந்து அணி 360 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.