துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு பதக்கத்தை அர்ப்பணிப்பதாக தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், சீனியர் உலகக்கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே தங்கப்பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறார். 20 வயதான இளவேனில் வாலறிவன், கடந்த மே மாதம் முனிக்கில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பையில் முதல் முறையாகக் களம் கண்டார். அந்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டு நான்காம் இடம் பிடித்தார். எனிலும் இடைவிடாத பயிற்சியினால் தற்போது தங்கப்பதக்கம் வென்று தாயகத்தை பெருமையடைய செய்து இருக்கிறார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வெல்ல உறுதுணையாக இருந்த பெற்றோருக்கு பதக்கத்தை அர்ப்பணிப்பதாக தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், இன்னும் இரண்டு மாதங்களில் சீனாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவதுதான் தனது அடுத்தகட்ட இலக்கு எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் தான் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.