
ஆசியக் கோப்பையை விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் கூறியுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14 வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.
இந்த அட்டவணையில் இந்தியாவிற்கு 18 மற்றும் 19ம் ஆம் தேதிகளில் அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தடுத்த நாளிலும், பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் இடைவெளியிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பை அட்டவணைக்கு வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேவாக் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில், “அட்டவணையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த காலத்தில் யார் அடுத்தடுத்த நாட்களில் ஒருநாள் போட்டியை விளையாடுகிறார்கள்? இங்கிலந்தில் டி20 போட்டிகள் விளையாட இரண்டு நாட்கள் இடைவெளி அளித்தார்கள். அதிக வெப்பம் இருக்கும் துபாயில் ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் நீங்கள் விளையாடுகிறீர்கள். இந்திய வீரர்கள் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள். இது சரியான அட்டவணை என்று நான் நினைக்கவில்லை.
ஆசியக் கோப்பை நடத்துவதில் ஏன் இப்படியான கூக்குரல் எழுப்பப்படுகிறது?. ஆசியக்கோப்பையை விளையாடாதீர்கள். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களுக்கு அணியை தயார் செய்யுங்கள். அடுத்தடுத்த நாளில் ஒருநாள் போட்டி விளையாடுவது மிகவும் கடினம்.
ஒரு போட்டி விளையாடி முடித்த பிறகு ஒரு வீரர் மீண்டும் உடல் தகுதி பெற குறைந்தபட்சம் 48 மணி நேரம் தேவைப்படுகிறது. ஏனெனில் ஒரு வீரர் 3.5 மணி நேரம் பீல்டிங் செய்கிறார். அதோடு ஒரு பேட்ஸ்மேன் இரண்டு மணி நேரம் விளையாடினால் மொத்தம் 5.5 மணி நேரம் ஆகிறது. அதனால், உடல் தகுதி பெற 24 முதல் 48 மணி நேரம் வரை தேவைப்படும். ஆசியக் கோப்பையில் இந்தியாவின் அட்டவணையை பிசிசிஐ மாற்றி அமைக்க வேண்டும். அடுத்தடுத்த நாளில் எந்தப் போட்டியும் இருக்கக் கூடாது. ” என்று கூறினார்.
அட்டவணை:
செப்-15- இலங்கை-பங்களாதேஷ்,
செப்.16- பாக்-தகுதிச்சுற்று அணி,
செப்.17- இலங்கை-ஆப்கானிஸ்தான்,
செப்.18- ல் இந்தியா-தகுதிச்சுற்று அணி,
செப்.19-ல் இந்தியா-பாகிஸ்தான்,
செப்.20- பங்களாதேஷ்-ஆப்கன் அணி,
செப்.23- குரூப்ஏ வின்னர்- குரூப் ஏ ரன்னர்,
செப்.23- குரூப் பி வின்னர்- குரூப் பி ரன்னர்,
செப்.25- குரூப் ஏ வின்னர்- குரூப் பி வின்னர்,
செப். 26- குரூப் ஏ ரன்னர்- குரூப் பி ரன்னர்,
செப்.28- இறுதிப்போட்டி.