”அவர் சொன்னதுபோல் உண்மையாகிவிட்டது” - வர்ணனையாளராக கணிப்பில் ஜொலித்த தினேஷ் கார்த்திக்!

”அவர் சொன்னதுபோல் உண்மையாகிவிட்டது” - வர்ணனையாளராக கணிப்பில் ஜொலித்த தினேஷ் கார்த்திக்!
”அவர் சொன்னதுபோல் உண்மையாகிவிட்டது” - வர்ணனையாளராக கணிப்பில் ஜொலித்த தினேஷ் கார்த்திக்!

”நாக்பூர் டெஸ்டில் இந்தியா, ஒரு இன்னிங்ஸே விளையாடும்” என தமிழக அணி வீரர் தினேஷ் கார்த்திக், அப்போட்டி வர்ணனையின்போது நம்பிக்கை தெரிவித்திருந்தார். ”அவர் சொன்னதுபோல் உண்மையாகிவிட்டது” என்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாக்பூரில் கடந்த 9ஆம் தேதி தொடங்கிய பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபியின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து இந்திய அணியின் மூத்த வீரரூம் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கணித்தபடியே போட்டி அமைந்துள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்கிய இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்தபோது வர்ணனையாளர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது வர்ணனை செய்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், “தற்போதைய என் கணிப்பின்படி, இந்திய அணி ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் தான் பேட்டிங் செய்யும் என நினைக்கிறேன்” என்றார்.

இதற்கு ஆஸ்திரேலிய வர்ணனையாளர் மார்க் வாக், ”ஓ.... அப்படியா கார்த்திக்... பார்த்துவிடலாம்” எனப் பதிலளித்தார். ஆனாலும், தனது கருத்தில் பின்வாங்காத தினேஷ் கார்த்திக், ”எனது கணிப்பு இதுதான்” என உறுதியளித்தார். அதற்கு மார்க் வாக், “இரு அணியினரும் பேட் செய்து முடிக்காதவரை ஆடுகளத் தன்மை குறித்து கணிக்க முடியாது. ஆட்டத்தின் போக்கு எப்படி நகருகிறது என்பதைப் பார்க்கலாம். ஆஸ்திரேலியர்கள் எளிதில் விட்டுவிடமாட்டார்கள். சில ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் போன்று இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள் கிடையாது. எங்களிடம் சராசரி 60 ரன் வைத்துள்ள இருவர் உள்ளனர்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட சக வர்ணனையாளரான ரவிசாஸ்திரி, “மார்க்.... உங்களது ஒரு கணிப்பை நினைவூட்டுகிறேன். 2020ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் ஆல்-அவுட் ஆனபோது, ’அந்த தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் வெல்லப்போகிறது’ என்று கூறினீர்கள். ஆனால் நடந்தது (2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி) என்ன? இந்த மாதிரியே உங்களது கணிப்பு தொடரட்டும்” என நக்கலாய்ப் பதிலளித்தார்.

தினேஷ் கார்த்திக்கின் கணிப்பின்படி, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு நபர், “உங்கள் கணிப்பு துல்லியமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, “இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட வேண்டியதில்லை என்கிற உங்களது கணிப்பு உண்மையாகிவிட்டது” எனவும், வேறொருவர், “உங்களது கணிப்பு புத்துணர்வு அளிப்பதாக இருக்கிறது” எனவும் தெரிவித்துள்ளனர். இதில் பலரும் தினேஷ் கார்த்திக் கணித்த கணிப்பு ’சரி’ எனப் பதிவிட்டுள்ளனர்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com