ராஜஸ்தானை நாளை சந்திக்கிறது சிஎஸ்கே: தோனி டவுட், ரெய்னா ஃபிட்!

ராஜஸ்தானை நாளை சந்திக்கிறது சிஎஸ்கே: தோனி டவுட், ரெய்னா ஃபிட்!
ராஜஸ்தானை நாளை சந்திக்கிறது சிஎஸ்கே: தோனி டவுட், ரெய்னா ஃபிட்!

காயம் காரணமாக அவதிப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, நேற்று பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதனால் நாளை நடக்கும் போட்டியில் அவர் ஆடுவாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு வருடத் தடைக்குப் பிறகு களமிறங்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு வரவேற்பு பலமாக இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சிஎஸ்கே, அதன் சொந்த மண்ணில் வென்று விசில் போட்டது, விர்ரென்று! அடுத்தப் போட்டியில் கொல்கத்தாவை, சேப்பாக்கத்தில் புரட்டியெடுத்தது. முதல் போட்டியில் ’சீனியர்’ பிராவோவும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸூம் சென்னை வெற்றிக்காக, ருத்ர தாண்டவம் ஆடினார். ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 4 ரன்னில் வெற்றியை நழுவவிட்டது சிஎஸ்கே. இந்தப் போட்டியில் கடைசி பந்துவரை தோனி, ’ஒத்தையில’ போராடி மிரட்டினார். அவர் 44 பந்துகளில் 79 ரன் எடுத்து சிங்கமாக நின்றார் சிங்கிளாக! 

இந்நிலையில் காவிரி பிரச்னைக்காக தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டம் காரணமாக, சென்னை போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. இங்கு சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. இதில் சென்னை ரசிகர்கள் புனேவுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் புனே மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருந்த சுரேஷ் ரெய்னா, இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டார். இதனால் அவர் நாளையை போட்டியில் களமிறங்குவது உறுதியாகிவிட்டது. ’சின்ன தல’ அணிக்குத் திரும்புவது யானை பலம் என்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் ’பெரிய தல’ தோனி?

பஞ்சாப்புக்கு எதிராக நடந்த போட்டியின்போது முதுகு பகுதியில் காயமடைந்த தோனி, கடைசிவரை வலியோடு விளையாடிக்கொண்டிருந்தார். 

பின்னர் அவர், ‘எனது முதுகில் வலி ஏற்பட்டதால் போட்டியின் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்திருக்கிறார். எனது கைகள் அதன் வேலையை செய்வதால் எனது முதுகை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. இது அதிகமான பாதிப்பாக இருக்கக் கூடாது. எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கேப்டன் தோனி வரவில்லை. அவரது காயம் குணமாகாததால் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியின் காயம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. வீரர்களும் ஏதும் கூற மறுத்துவருகின்றனர். 

அப்படியே தோனி வலியோடு வந்தாலும் அவர் கீப்பிங் செய்வாரா என்பது டவுட்தான். முதுகு வலி என்பதால் கீப்பிங்கின் போது குனிந்து நிமிர்வது கஷ்டம் என்பதால், தோனிக்குப் பதில் வேறு ஒரு வீரரை கீப்பிங் செய்ய விட்டுவிட்டு தோனி பேட்ஸ்மேனாக இறங்கலாம். அவர் கீப்பிங் செய்யவில்லை என்றால் தமிழக வீரர் என். ஜெகதீசன் அல்லது அம்பதி ராயுடு அகியோர் கீப்பிங் செய்யலாம். சாம் பில்லிங்ஸும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான் என்பதால் அவர் கூட கீப்பிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. 

‘தோனி அணியில் இருந்தால் அது வீரர்களுக்கு பெரிய பலம். மனரீதியாகவே அதிக நம்பிக்கையை கொடுக்கும். அதனால் அவர் நாளைக்குள் குணமாகிவிடுவார் என்று நம்புகிறோம்’ என்கிறார் அணி நிர்வாகி ஒருவர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com