“தோனியே எங்களின் கடைசி நம்பிக்கை”- ரசிகர்கள் உற்சாகம்
நடப்பு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 39 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தோனி மற்றும் ஜடேஜா களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என ரசிகர்கள் நம்புகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக முந்தைய தரவுகளும் உள்ளன. அதன்படி தோனி ஆட்டமிழக்காமல் இருந்த 47 போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது. தோனி ஆட்டமிழக்காமல் இருந்த 2 போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
எனவே ரசிகர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றிப் பெற தோனியே எங்களின் ஒரே நம்பிக்கை என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் தோனி ஒருமுறை 29 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த பிறகு சதமடித்த புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.