இனி இந்திய ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது ! "ஆல் தி பெஸ்ட் மாஹி பாய்"

இனி இந்திய ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது ! "ஆல் தி பெஸ்ட் மாஹி பாய்"
இனி இந்திய ஜெர்சியில் தோனியை பார்க்க முடியாது ! "ஆல் தி பெஸ்ட் மாஹி பாய்"

2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிதான் இந்தியா தோனிக்காக விளையாடிய கடைசிப் போட்டி. அதன் பின்பு ரசிகர்கள் இதுவரை கிரிக்கெட் மைதானத்தில் பார்க்கவில்லை. இனி பார்க்கப்போவதுமில்லை என்றாகிவிட்டது இப்போது. இந்தியா தன்னுடைய 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த இன்றைய நாளில் சரியாக இரவு 7.29 மணிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றிக் கூறி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைப்பெற்றார் இந்திய கிரிக்கெட்டின் கதாநாயகன் மகேந்திர சிங் தோனி.

எப்படியாவது தங்களுடைய ஆதர்ச நாயகனை இந்திய அணியின் சீருடையில் மீண்டும் பார்த்திட முடியாதா என ஏங்கிய இந்திய ரசிகர்களுக்கு அவரின் ஓய்வு அறிவிப்பு பேரிடி என்றுதான் சொல்ல வேண்டும். தோனியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பார்த்துவிட வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரசிகர்களை தவிக்கவிட்டார் தோனி. இப்போதைக்கு ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவரை மஞ்சள் நிற ஜெர்சியில் சிஎஸ்கே அணிக்காக செப்டம்பர் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் காணலாம் அவ்வளவுதான். என்னதான் இருந்தாலும் இந்திய அணியின் ஜெர்சியில் பார்ப்பது போல வருமா என ரசிகர்கள் விசும்பினாலும், உண்மை அதுதானே.

இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகக் கோப்பையில் விளையாடிய தோனி, அதன்பின்னர் மீண்டும் இதுவரை இந்திய அணியில் விளையாடவில்லை. அத்துடன் தான் ஓய்வு பெற்றதாகவும் தோனி அறிவிக்கவில்லை. இதனால் அவர் இனிமேல் இந்திய அணிக்காக விளையாடுவாரா ? மாட்டாரா ? என்ற பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதை பொறுத்து இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. பல்வேறு கிரிக்கெட் வீர்ரகள், விமர்சகர்கள் என எல்லோரும் தோனி ஓய்வுக் குறித்த கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் மனுஷன் எதற்கும் அசைந்துக்கொடுக்கவில்லை. அவருக்கு எப்போதும் தனி ஸ்டைல் உண்டு. தன்னுடைய ஓய்வுக் குறித்த அறிவிப்பையும் அலட்டிக்காமல் அதே ஸ்டைலில் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர்களோ கண்ணீர் கடலில் இருக்கிறார்கள்.

தோனியின் ஓய்வுக் குறித்த அறிவிப்பை கேள்விப்பட்ட உடனே சமூகவலைத்தளங்களில் இருக்கும் ரசிகர்கள் "நீங்கள் இதை செய்திருக்க கூடாது மாஹி பாய்" என்றே தெரிவித்து இருக்கின்றனர். 2005 இல் தொடங்கிய தோனியின் சகாப்த பயணம் சென்னையில் 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைந்திருக்கிறது. ஏன் தோனியை ரசிகர்களுக்கு இவ்வளவு பிடிக்கிறது ? சச்சின் சொன்னதுப் போல இந்திய கிரிக்கெட்டின் மகத்தான கேப்டனாக அவர் இருந்ததே காரணம். மேலும் தனி மனித ஒழுக்கமும் அவரின் குணநலன்களும் ரசிகர்களுக்கு பாடம். அதனால்தான் இத்தனை ஆண்டுகள் தோனியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், இன்னும் கொண்டாடுவார்கள். ஆனால் தோனியை இனி எப்போதும் நாம் நீல நிற ஜெர்சியில் பார்க்க முடியாது. மறக்க முடியாது நினைவுகளுக்கு நன்றி தோனி, நாமமும் சொல்வோம் "ஆல் தி பெஸ்ட் மாஹி பாய்".

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com