இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மா டி20 போட்டியில் மூன்று மெயிடன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணி இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி சூரத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அதிரடியாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்பிற்கு130 ரன்கள் எடுத்தது.
131 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்ரிக்கா அணி 19.5 ஓவரில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்து. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை சாய்த்தார். அத்துடன், டி20 போட்டியில் மூன்று மெயிடன் ஓவர்கள் வீசிய இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தீப்தி சர்மா முதல் மூன்று ஓவர்களையும் மெயிடனாகவே வீசினார். தான் வீசிய 19வது பந்தில்தான் முதல் ரன்னை கொடுத்தார். இந்திய ஆண்கள் அணியில் கூட இதுவரை யாரும் மூன்று ஓவர்கள் மெயிடனாக வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.