கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் அணிகள் நடப்பு சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் விளையாடின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 127 ரன்களை எடுத்திருந்தது. அந்த இலக்கை விரட்டியது கொல்கத்தா.
டெல்லி அணி பேட் செய்த போது இருபதாவது ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அந்த ஓவரை வீசிய டிம் சவுதி, அஸ்வினை வம்புக்கு இழுத்துள்ளார். பின்னர் சவுதி உடன் கொல்கத்தா கேப்டன் மோர்கனும் சேர்ந்து கொண்டுள்ளார். உடனடியாக அஸ்வின் கோவத்தில் வார்த்தைகளை விட, கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இடையே வந்து சமாதானம் செய்து வைத்தார்.
19-வது ஓவரின் கடைசி பந்தில் கூடுதலாக ஒரு ரன்னுக்காக ஓட்டம் எடுத்தது இந்த சச்சரவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக மோர்கனை இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் செய்து வெளியேற்றினார் அஸ்வின்.