39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்தனர்.
ரோகித் ஷர்மா 176 (244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய மயாங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் 215 (371) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 136 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் மார்கம் 5 (21) ரன்களில் ஸ்டம்ப் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து தியுனிஸ் டி புருயின் 4 (25) ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் நடையைக்கட்டினார். பின்னர் வந்த டேன் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார். இதனால் தென்னாப்பிரிக்க அணியின் 2ஆம் நாள் முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.