பண்டாரி மீதான தாக்குதல் கோழைத்தனமானது: சேவாக், தவான், காம்பீர் கடும் கண்டனம்!

பண்டாரி மீதான தாக்குதல் கோழைத்தனமானது: சேவாக், தவான், காம்பீர் கடும் கண்டனம்!
பண்டாரி மீதான தாக்குதல் கோழைத்தனமானது: சேவாக், தவான், காம்பீர் கடும் கண்டனம்!

டெல்லி கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவரை, தாக்கிய சம்பவம் கோழைத்தனமானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டெல்லி கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவராக இருப்பவர் அமித் பண்டாரி. இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். சையத் முஸ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக 23 வயதுக்குட்பட்ட டெல்லி அணி வீரர்கள் தேர்வுக்கு 33 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.. அதை அமித் பண்டாரி மற்றும் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பார்த்து கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென மைதானத்துக்குள் நுழந்த அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பின் அவரை ஹாக்கி ஸ்டிக், இரும்புக் கம்பி, கிரிக்கெட் மட்டை ஆகியவற்றால் சரமாரியாகத் தாக்கியது. அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து அவர்களை தடுத்தனர். ஆனால், அந்தக் கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு தாக்குதலைத் தொடர்ந்தது.

இந்த தாக்குதலில் நிலை தடுமாறிய பண்டாரி சரிந்து விழுந்தார். பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடியது. பலத்த காயம் அடைந்த பண்டாரியை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தலை, காது மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏழு தையல் போடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். 

23 வயதுக்கு உட்பட்ட அணி தேர்வில், அனுஜ் தேடா என்பவர் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக ஆத்திரத்தில், அவர் ஏற்பாட் டில் அந்த கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது 

இந்த தாக்குதல் பற்றி அமித் பண்டாரி கூறும்போது, ‘’எனது விளக்கத்தை போலீசாரிடம் தெரிவித்துவிட்டேன். இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் காரணத்தையும் தாக்கியவர்கள் பற்றியும் கூறிவிட்டேன்’’ என்றார். இந்த சம்பவம் டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனுமான வீரேந்திர சேவாக் கூறும்போது, ‘’வீரரை தேர்வு செய்யாததற்காக, பயிற்சியாளரை தாக்கிய சம்பவம் மிகவும் கீழ்த்தரமானது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போதுமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் டெல்லியை சேர்ந்தவருமான ஷிகர் தவான் கூறும்போது, ‘’அமித் பண்டாரி மீதான தாக்குதல் நம்ப முடியாததாக இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. அதிர்ச்சியானது, கோழைத்தனமானது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறும்போது, ‘’இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது. தாக்குதலில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com