சுரேஷ் ரெய்னா நிகழ்ச்சி ரத்து: காவிரி போராட்டத்தின் முதல் வெற்றி
சுரேஷ் ரெய்னா கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமையாததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி உள்ளிட்ட சிலர், சென்னை வீரர்கள் கறுப்புப்பட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். சேப்பாக்கம் விளையாட்டு மைதானமே காலியாக இருந்தால் நமது ஒற்றுமையை உலகம் அறியும் என பாரதிராஜா, சத்யராஜ் உட்பட பல திரைத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளம் ராஜாஸ் கல்லூரியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதாக இருந்தது. தமிழ்நாட்டில் வலுத்து வரும் போராட்டத்தை உணர்ந்து கொண்ட கல்லூரி நிர்வாகம் அந்நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவதாக அறிவித்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறலாம் என முன் கூட்டியே உணர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதை காவிரி போராட்ட ஆதரவாளர்கள் தங்களின் முதல் கட்ட வெற்றியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.