`என்னடா பண்ட்-டு நீ’- உரிமையோடு வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்!

`என்னடா பண்ட்-டு நீ’- உரிமையோடு வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்!
`என்னடா பண்ட்-டு நீ’- உரிமையோடு வேதனை தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்!

ரிஷப் பண்ட், தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். அந்தவகையில், ஒருநாள் போட்டியில் அவரது சுமாரான ஆட்டம் பலராலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. டெஸ்ட் மேட்ச்சை விடவும், ஒருநாள் போட்டியில் அவருடைய செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பேட்டிங்-கில் மிக வலுவான வீரர் என்ற பெருமையுடன் சர்வதேச போட்டிக்குள் நுழைந்த பண்ட், டெஸ்ட் மேட்ச்களில் அதிரடி காட்டினாலும் கூட, ஒருநாள் போட்டிகளில் சுமாராகவே விளையாடி வருகின்றார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சென்சுரி விளாசியதுபோல சில நேரங்களில் ஒருநாள் போட்டியிலும் அசத்துகிறார். ஆனாலும் கூட, அது வெகுசில நேரங்களில் மட்டுமே நடப்பதுதான் சோகம் என்கின்றனர் விமர்சகர்கள்!

கடைசியாக நடந்த 10 டி20 போட்டிகளே இதற்கு சான்று! ஏனெனில் இந்த 10 போட்டிகளிலும் ஒரேயொருமுறைதான் பண்ட் 40 ரன்களை கடந்திருந்தார். போலவே 30 ரன்களை ஒருமுறையும், 20 ரன்களை ஓரிருமுறையும் என சொற்பமாகவே ரன் சேகரித்திருக்கிறார் ரிஷப். தற்போது இந்திய அணியின் நியூசிலாந்து பயணத்தில் வரும் 3 டி20-யிலும் விளையாடியிருந்த பண்ட், மொத்தமே 33 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டி என எடுத்துக்கொண்டால், டி20-ஐ விட கொஞ்சம் பரவாயில்லை! ஏனெனில் இதில் கடைசி 10 மேட்ச்களில், 3 முறை 50 ரன்களை கடந்துள்ளார். ஒருமுறை சென்சுரியும் அடித்திருக்கிறார். இதற்கிடையே அணியின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமான சஞ்சு சாம்சன், வெறுமனே மைதானத்துக்கு வெளியே அமரவைக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை இன்னும் எரிச்சல் படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமன்றி, விமர்சகர்களும் இந்த நேரத்தில் கொந்தளித்துள்ளனர்.

அந்தவகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், தனது யூ-ட்யூப் சேனலில் ரிஷப் பண்ட்டை நேரடியாக தன்னுடைய விமர்சித்திருக்கிறார். அவர் அந்த வீடியோவில், `சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதிலிருந்து, ரிஷப் பண்ட்டுக்கு சின்ன பிரேக் கொடுக்கலாம்’ என்று இந்திய அணிக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் பேசுகையில், “ரிஷப் பண்ட்டிடம்,  இந்திய அணி சார்பில்`கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க., அதுக்குப்பிறகு இந்திய அணிக்கு வந்து விளையாடுங்கனு சொல்லி அவருக்கு சின்னதா ஒரு பிரேக் கொடுக்கலாம். இப்போதைக்கு சர்வதேச அளவுல கிரிக்கெட்ல இருந்து பண்ட்-க்கு பிரேக் கொடுத்தாகூட போதும். இந்த விஷயத்துல இந்திய அணி அவரை நல்லா மேனேஜ் பண்ணலை. ரிஷப்பும், தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்க மாட்டிங்கறான்! ரிஷப்பின் ஆட்டத்தை பார்த்து, எனக்கு ரொம்பவும் வருத்தமாயிருச்சு. என்னடா பண்ட்-டு....?” என்று உரிமையோடு பேசியுள்ளார்.

மேலும் ரிஷப் பண்ட்டிடம் நேரடியாகவே சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “இந்த மாதிரி மேட்ச்ல கோட்டைவிடறயே பண்ட்... இதுமாதிரி மேட்ச்லலாம் ஒரு பொள பொளந்து, அடிச்சு ஆடினாதான் நல்லா இருக்கும்....!” என்றுள்ளார்.

இவற்றுடன் ரிஷப் பண்ட்டுக்கு, சில டிப்ஸூம் வழங்கியுள்ளார் ஸ்ரீகாந்த். குறிப்பாக, “ரிஷப் பண்ட், ஆட்டத்தில் தன்னுடைய பாணியை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும். தனக்கென நேரம் செலவிட வேண்டும். அடுத்து WorldCup வரப்போகுது. இப்பவே பலரும் பண்ட் சரியா விளையாடுவதில்லைனு நிறைய விமர்சனம் வருகிறது. இதலாம் ரிஷப் தனக்கான ப்ரெஷரா இல்லாமல், எனர்ஜியா எடுத்துகிட்டு, வேலை செய்யனும். தன்னைதானே ரிஷப் கண்டுபிடிக்கணும். எப்போதும் தன் விக்கெட்டை அவர் கொடுத்துக்கிட்டே இருக்காரு... அப்படியில்லாம தனக்கு சரியானதை... குறிப்பா தன் விளையாட்டுக்கு சரியானதை செஞ்சு, அதை பின்பற்றணும் ரிஷப்! எப்பவும் இதேமாதிரி தோத்துக்கிட்டே இருந்தா, பைத்தியக்காரத்தனமா இருக்காதா?” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com