ஆஸ்திரேலியா: பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. என்ன காரணம்? #ViralVideo
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி பார்டர் - காவஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி வரும் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் பிரிஸ்பேனிலிருந்து மெல்போர்ன் புறப்பட்டுச் சென்றனர். அந்தச் சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது குழந்தைகளைப் புகைப்படம் எடுத்ததாக கருதி, விராட் கோலி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது, மெல்போர்ன் விமான நிலையத்தில் விராட் கோலியின் குடும்பத்தை நோக்கி கேமரா வைக்கப்பட்டதாகவும், அவருடைய குழந்தைகளை போட்டோ எடுத்ததாகவும் கருதி அவர் கோபப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவர், "எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. எனவே, எனது அனுமதி இல்லாமல் அவர்களைப் புகைப்படம் எடுக்காதீர்கள்" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அவர்கள், "உங்கள் குடும்பத்தைச் சார்ந்த புகைப்படங்களையோ, வீடியோக்களையோ எடுக்கவில்லை" என உறுதியளித்துள்ளனர். அதன்பிறகே அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததற்குப் பிறகு, தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.