கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிய உணவு கடையை இந்திய கிரிக்கெட் வீரரும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான நடராஜன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு காயம் காரணமாக விளையாட முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறேன்.
நடைபெறவிருக்கும் சையத் முஷ்தாக் அலி டிராபி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். விளையாடுவதை சிறப்பாக விளையாட விரும்புகிறேன் மீதியை கடவுள் பார்த்துக் கொள்வார் என தெரிவித்தார்.
2 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் நடராஜன், கடந்த 2021 மார்ச் மாதத்திற்கு பிறகு எந்தவிதமான சர்வதேச போட்டிகளிலும் தேர்வு செய்யப்படாமல் இருந்துவருகிறார்.
”தற்போது உள்ள இளைஞர்கள் நல்லவிதமாக விளையாடி வருகிறார்கள். சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது நல்ல விஷயம். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் டி20 தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்” என தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடராஜன், சூழ்நிலை காரணமாக இவ்வாறு அவர்கள் உருவாகிறார்கள். தமிழக அரசு இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. உடன் இருப்பவர்களும் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.