”பலவீனமான ஆண்களுக்கான இடம் இது இல்லை..” சொந்த வீரர்களையே கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிடம் 0-2 என தோல்வியடைந்த இங்கிலாந்து அணியை, பலவீனமான ஆண்களுக்கு இடமில்லை என கேப்டன் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சித்தார். ஆஸ்திரேலிய ஊடகங்கள் இங்கிலாந்தை மோசமான தலைப்புகளில் விமர்சிக்கின்றன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் எண்ணத்தில் களம்கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ், ஹசல்வுட் போன்ற மேட்ச் வின்னிங் பவுலர்கள் இல்லை என்பதால் இங்கிலாந்து அணியே தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது..
மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவே ‘பாஸ்பால்’ ஆட்டம் இங்கிலாந்து அணியில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்தின் கனவுக்கோட்டையை சுக்குநூறாக உடைத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா, 2 போட்டிகளில் அடுத்தடுத்து இங்கிலாந்திற்கு படுதோல்வியை பரிசளித்து வெற்றிநடை போட்டு வருகிறது.
கப்பா மைதானத்தில் நடைபெற்ற பிங்-பால் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டை தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்து அணியில் சோபிக்கவில்லை, அதேவேளையில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் பென் ஸ்டோக்ஸை தவிர வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்தசூழலில் படுதோல்விக்கு பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ், சொந்த வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்நோக்கும் வகையில் கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தினார். தோல்வி குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவில் பலவீனமான ஆண்களுக்கு இடமில்லை, நான் கேப்டனாக இருக்கும் டிரஸ்ஸிங் அறையிலும் பலவீனமான ஆண்களுக்கு இடமில்லை. அழுத்தமான நேரங்களில் நாங்கள் என்ன மனநிலையில் விளையாடுகிறோம் என்பதை சரிசெய்யவேண்டிய இடத்தில் இருக்கிறோம்” என விரக்தியில் பேசினார்.
மேலும், ஆஸ்திரேலியா ஊடகங்கள் ‘அசிங்கப்பட்ட, நசுக்கப்பட்ட இங்கிலாந்து, பாஸ்பால் சாம்பல்’ போன்ற தலைப்புகளில் மெக்கல்லம் மற்றும் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை விமர்சித்து வருகிறது..

