கிரிக்கெட் என்றாலே சென்னைதான்.. பிரதமர் மோடி வெளியிடும் முக்கிய அறிவிப்பு? சேப்பாக்கத்துக்கு மகுடம்!
இந்தியாவின் ஐபிஎல் தொடரைப்போல உலகின் பல்வேறு நாடுகளும் அதே பாணியிலான லீக் தொடரைத் தொடங்கி நடத்தி வருகின்றன. இதில் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் வெற்றிகரமான லீக் தொடராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக் பேஸ் (Big Bash) லீக் தொடர் திகழ்ந்து வருகிறது.
கிரிக்கெட்டுக்கு இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு வெளியே, குறிப்பாக இந்தியாவின் பிக் பேஸ் தொடரை பிரபலப்படுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை எங்கு நடத்தலாம் என பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், பெரும்பாலான நிர்வாகிகளால் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பிசிசிஐ அனுமதி இல்லாமல் இந்தப் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தமுடியாது என்பதால், இதுகுறித்து பிசிசிஐ-யிடம் பேசுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
தொடர்ந்து பிசிசிஐயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், முதலில் இந்த திட்டத்துக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அப்போது இரு நாடுகளின் உறவுகளை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் வைத்து இதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

