IND vs SA: அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த சாய் சுதர்சன்! 8 விக். வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
ind vs sa
ind vs saCricinfo

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 1-1 என தொடரை சமன் செய்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

சொந்த மண்ணில் மோசமான சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா!

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் தொடக்க வீரர் ஹென்ரிக்ஸை போல்டாக்கி 0 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், அடுத்து களத்திற்கு வந்த டஸ்ஸெனையும் கோல்டன் டக்கில் வெளியேற்றி அடிக்கு மேல் அடி கொடுத்தார். 3 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற, அடுத்து ஜோடி சேர்ந்த டோனி டே மற்றும் கேப்டன் மார்க்ரம் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

arshdeep singh
arshdeep singh

ஆனால் இந்த ஜோடியை அதிக நேரம் நிலைத்து நிற்க அனுமதிக்காத அர்ஷ்தீப் சிங், இந்தமுறை டோனி டேவை 28 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து களத்திற்கு வந்த க்ளாசனை 6 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய அர்ஷ்தீப் சிங், பாதி தென்னாப்பிரிக்கா அணியை தனியொரு ஆளாக வெளியேற்றி திணறவைத்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும் ஒருபுறம் அணிக்காக எய்டன் மார்க்ரம் போராடினார். ஆனால் அடுத்து பந்துவீச வந்த ஆவேஷ் கான் அடுத்தடுத்து மார்க்ரம், மல்டர் மற்றும் மில்லர் என அனைவரையும் வெளியேற்ற தென்னாப்பிரிக்கா அணி ஆட்டம் கண்டது. கடைசி விக்கெட்டுக்கு டெய்ல் எண்டர்கள் சில ஷாட்களை அடித்தாலும், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணியால் 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணி பதிவுசெய்த மிகக்குறைவான டோட்டல் இதுவாகும்.

அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த சாய் சுதர்சன்!

117 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ருதுராஜ் இருவரும் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ருதுராஜை 5 ரன்னில் வெளியேற்றிய தென்னாப்பிரிக்கா அணி முதல் விக்கெட்டை எடுத்துவந்தது. 23 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் அடுத்து கைக்கோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சாய்சுதர்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

sai sudharsan
sai sudharsan

6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதமடித்து வெளியேறினார். ஆனால் கடைசிவரை நிலைத்து நின்ற சாய் சுதர்சன் 9 பவுண்டரிகளை விரட்டி, தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியிலேயே அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 16.4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்களை எட்டிய இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக சாய்சுதர்சன் 55 ரன்கள் அடித்தார். ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com