”ரோகித்தைத் தொந்தரவு செய்யாதீங்க..” இரண்டு பேருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ?
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் குறித்து பிசிசிஐ தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த யூகங்களை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
டி20 மற்றும் டெஸ்ட் இரண்டு வடிவங்களிலும் ஓய்வுபெற்றுள்ள ரோகித் சர்மா, ஒருநாள் வடிவத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரால் முதலிரண்டு போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை. இதற்கிடையே, 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு இடமில்லை, விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. ரோகித் சர்மாவை வெளியேற்றுவதில் தேர்வுக்குழு மற்றும் கம்பீர் இரண்டு தரப்பும் உறுதியாக இருப்பதாகவும், அவருக்குப் பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் எடுக்க அவர்கள் தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதை பிசிசிஐ உறுதியாக மறுத்தது.
தவிர, மூன்றாவது போட்டியில் சதமடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்ததுடன், பலருடைய விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் அழுத்தம் அதிகமான ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் நிச்சயம் இருக்க வேண்டும் என்றும், அவரை போன்ற ஒரு வீரரை சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் பிடித்துவிடலாம் என நினைத்துவிடக்கூடாது என்றும் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் குறித்து பிசிசிஐ தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தலைமை தேர்வாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தொந்தரவு செய்ய கூடாது என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்த யூகங்களை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த பேச்சுக்கும் இடமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், “ரோகித் சர்மா எங்கள் அணியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். தொடர்ந்து விளையாடி வருகிறார். ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் செய்திகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. தற்போதைய நிலவரப்படி, அவர் ஓய்வு பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொருவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், அணியில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்வுக்குழுவினரிடம் மட்டுமே உள்ளது. இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு போட்டிகளில் வென்று வருகிறது, எனவே தற்போதைக்கு மாற்றங்கள் எதுவும் தேவைப்படாது” என உறுதியளித்துள்ளார். இதனால், காம்பீர், அகார்கர் இனி ரோகித் பற்றி வாய் திறக்கமாட்டார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
முன்னதாக, தனது எதிர்கால திட்டங்கள் குறித்து தேர்வுக் குழுவினர் கூறிய கருத்தால் ரோகித் அதிருப்தி அடைந்ததாகவும், இந்த விஷயத்தில் தலையிடுமாறு பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகளை அவர் அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

