இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இதைச் செய்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராகவும், இரண்டாவது உலக விக்கெட் கீப்பராகவும் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஜிம்பாப்வேவின் ஆண்டி பிளெவர் இச்சாதனையை படைத்திருந்தார்.
இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார் ரிஷப் பண்ட்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக 29 சிக்சர்கள் விளாசினார் ரிஷப் பண்ட்.
இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியின் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 134, 118 ரன்கள் விளாசிய ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸை சேர்த்து அதிக ரன்கள் அடித்த (252) விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார்.
இதற்கு முன் 204 ரன்கள் அடித்திருந்த அலெக் ஸ்டீவர்ட்ஸின் சாதனையை முறியடித்தார் பண்ட்.
இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் (4 சதங்கள்) சாதனையை சமன்செய்தார் ரிஷப் பண்ட்.
இப்பட்டியலில் 6 சதங்களுடன் ராகுல் டிராவிட் முதலிடத்தில் நீடிக்கிறார்.