"48 மணி நேரத்திற்கு முன்பே எனக்கு தெரியும்; ஆனாலும் நான் விளையாட விரும்பினேன்"- மனம் திறந்த அஸ்வின்!

“இந்தியாவிற்கு என்னுடைய பங்களிப்பை அளிக்கவோ அல்லது உலகக்கோப்பை பட்டத்தை வெல்லவோ எனக்கு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று அஸ்வின் கூறியுள்ளார்.
Ashwin
AshwinTwitter

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸை மட்டுமே மனதில் வைத்து அஸ்வினை எடுக்காமல் தவறுசெய்துவிட்டது. இந்த ஆடுகளத்தில் இரண்டாவது இன்னிங்ஸின் போது அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்துவீச்சாளர் இருப்பது இந்தியாவிற்கு பெரிய பலமாக இருந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் நிறைய இடது கை பேட்டர்கள் இருக்கின்றனர் என்பதை மறந்துவிட கூடாது’ என்று போட்டியின் முதல் நாளிலே ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

Ashwin
‘அவர மாதிரி ஒருத்தர எடுக்காம..’ அஸ்வினை டிராப் செய்த ரோகித்-ட்ராவிட்! கங்குலி, பாண்டிங் சொல்வதென்ன?

இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது, சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் இறுதிப்போட்டியில் பங்கேற்காதது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

”2018-19 முதல் வெளிநாட்டு ஆடுகளங்களில் என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்துள்ளது!”

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின், இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் விளையாடி அணிக்கு தனது பங்களிப்பை சிறப்பாக அளிக்க வேண்டும் என்பதில் தான் ஆர்வமாக இருந்ததாக குறிப்பிட்டதோடு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இதற்கு முன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அஸ்வின் அளித்துள்ள பேட்டியில், “இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு அதிக விரும்பத்தோடு இருந்தேன். ஏனென்றால் நாங்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு என்னுடைய பெரிய பங்களிப்பு இருந்தது என நம்புகிறேன். கடந்தமுறை இங்கிலாந்தில் நடைபெற்ற 2021 இறுதிப் போட்டியில் கூட நான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாகவே பந்து வீசினேன். 2018-19 முதல் இப்போதுவரை, எனது வெளிநாட்டு பந்துவீச்சு அருமையாகவே இருந்துள்ளது. அணிக்கான வெற்றியில் நான் என் வேலையை சரியாக செய்திருந்தேன். இதையும் நான் ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் பார்வையில் இருந்து தான் பேசுகிறேன்” என்று அஸ்வின் பேசியுள்ளார்.

”என்ன இருந்தாலும் என் அணியை நான் ஆதரிக்கிறேன்! அனைத்தையும் மீறி அணிக்கான வெற்றி என்பது தான் முக்கியம்!”

அணியின் எண்ணம் என்னவாக இருந்தது என்று பேசியிருக்கும் அஸ்வின், “நாங்கள் கடைசியாக இங்கிலாந்தில் விளையாடிய போது 2-2 என சமநிலையில் இருந்தது போட்டி. அப்போது 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் 1 ஸ்பின்னர் கொண்ட கலவையோடு சென்ற இந்திய அணி, அதில் வெற்றியையும் கண்டார்கள். அதை அவர்கள் இந்த இறுதிப் போட்டிக்கும் செய்ய நினைத்திருக்கலாம்.

Ashwin
AshwinTwitter

ஆனால் உண்மையில் பிரச்சனை என்னவென்றால் இதுபோன்ற ஆடுகளங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் விளையாடுவதற்கு, நான்காவது இன்னிங்ஸ் மட்டும் தான் ஏதுவாக இருக்கும். நான்காவது இன்னிங்ஸ் என்பது போட்டியின் மிக முக்கியமான அம்சமாகும். அதில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக விளையாட முடியும். எல்லாவற்றையும் தாண்டி இது முற்றிலும் அணியின் மனநிலையை சார்ந்த விஷயம். என்னால் பங்கேற்க முடியாமல் போனாலும், என்னுடைய அணி வெற்றிபெற வெளியில் இருந்தும் என்னால் முடிந்த பங்களிப்பை நான் எப்போதும் வழங்குவேன்” என்று பேசியுள்ளார்.

சச்சின், கவாஸ்கர் போன்ற மூத்த வீரர்கள் என்னை ஆதரிப்பது எனக்கு மகிழ்ச்சி!

தான் எடுக்கப்படாதது குறித்து முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற வீரர்கள் கண்டனங்கள் தெரிவித்திருந்தது குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “எனக்கு 36 வயதாகிறது. இப்போதும், மகிழ்ச்சி தரும் ஒரு சில விஷயங்கள் எல்லாவற்றையும் முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. உதாரணத்துக்கு சில முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர்களிடமிருந்து எனக்கு குறுஞ்செய்தி வரும். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நான் உற்சாகமாக மாறிவிடுகிறேன், உடனடியாக அவர்களுக்கு உற்சாகத்தோடு பதிலளிக்கிறேன். அவர்களையெல்லாம் நான் சிறுவயதில் ஆளுமைகளாக பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்போது, ‘நான் சிறப்பாக விளையாடுகிறேன்’ என்று கூறியதை கேட்டபோது, மகிழ்ச்சியாக இருந்தது.

எல்லாவற்றையும் தாண்டி, இறுதிப்போட்டியில் 48 மணி நேரத்திற்கு முன்பே நான் வெளியேறப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். என்னால் ஒரு வாய்ப்பையோ அல்லது உலகக்கோப்பை பட்டத்தையோ பெறமுடியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் எனது முழு இலக்கானது தோழர்களுக்கு என்னுடைய பங்களிப்பதை உறுதிசெய்து, பட்டத்தை வெல்ல அவர்களுக்கு உதவவேண்டும் என்பது. ஏனெனில் அணியில் நானும் ஒரு பங்கு என்பது எனக்கு தெரியும்” என்று அவர் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com