WC Final: சுழலில் திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு வாய்ப்பு? மாற்றம் செய்யும் ரோகித்?

அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அஸ்வின்
அஸ்வின்ட்விட்டர்

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இன்னும் இரண்டு தினங்களில் நிறைவுபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய நிலையில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதிலும் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இரு அணிகளும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பின் மோத இருக்கின்றன.

இதனால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சூர்யகுமாருக்குப் பதிலாக அஸ்வின் களமிறக்கப்படலாம் என பேச்சு எழுந்தது. ஆனால், ரோகித் சர்மா எந்த மாற்றமும் செய்யாமல் அதே பழைய அணியை வைத்து வெற்றிவாகை சூடினார். ஆனால் இறுதிப்போட்டியில் கட்டாயம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படலாம் என ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”டாஸ் போடும்போது பிக்சிங் செய்கிறார் ரோகித்” - பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

முன்னதாக, உலகக்கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் சேர்க்கப்பட்டார். காரணம், அவர் அதற்கு முந்தைய போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டிருந்தார். அத்துடன், சென்னை அவரது சொந்த மண்ணாகவும் இருந்தது. இதையடுத்தே, அஸ்வினைச் சேர்க்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் உலகக்கோப்பை மற்றும் முதல் லீக் போட்டியின் ஆடும் லெவனிலும் சேர்க்கப்பட்டார்.

அஸ்வின்
அஸ்வின்ட்விட்டர்

ஆனால், பிந்தைய ஆட்டங்களில் அவர் ஓரங்கட்டப்பட்டார். அஸ்வின் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டாலும் தொடர்ந்து இந்திய அணி, இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பாகவே விளையாடி வருகிறது. இந்நிலையில்தான் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் களமிறக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருப்பதால், அவ்வணி சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக தடுமாறுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்கூட ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு தடுமாற்றம் வெட்டவெளிச்சமாக தெரிந்தது.

இதையும் படிக்க: ”விராட் காட்டுப்பசியுடன் இருப்பது ஆச்சர்யம்” - கோலியின் சாதனை குறித்து சுப்மன் கில்

மேலும் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், டிராவிஸ் ஹெட் போன்ற இடது கை பேட்டர்களை வீழ்த்துவதற்கு, அஸ்வின் போன்ற ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற தேவையும் கட்டாயம் எழுந்துள்ளது. இதனால் அஸ்வின் இறுதிப்போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் அஸ்வின் அணிக்குள் வந்தால் இந்தியா யாரை நீக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது உள்ள சூழலில் சூர்யகுமார் யாதவ்வின் பேட்டிங் பெரிய அளவில் இந்தியாவுக்கு தேவைப்படவில்லை.

R Ashwin
R AshwinTwitter

இதன் காரணமாக சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் தெரிந்த அஸ்வினை அந்த இடத்தில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அதேநேரத்தில், தொடர்ந்து வெற்றிபெறும் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டாம் என்ற நிலையில் ரோகித் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அஸ்வினுக்கு அகமதாபாத் சொந்த மண்ணும் அல்ல. இதனால், அஸ்வின் அணிக்குள் வருவாரா, இல்லை இந்தியா அதே வீரர்களை வைத்துதான் விளையாடுமா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: ’மும்பையில் தாக்குதல் நடத்திய முகமது ஷமி’ - காவல் துறையினரின் நகைச்சுவை பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com