பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறை! சந்தீப் லாமிச்சனேவை இடைநீக்கம் செய்த நேபாள கிரிக்கெட் வாரியம்!

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சனேவுக்கு, இளம் பெண் பாலியல் வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டார்.
Sandeep Lamichhane
Sandeep Lamichhanehindustan times

நேபாள் அணியின் முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னருமான சந்தீப் லாமிச்சனே, 51 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி20 போட்டிகளிலும், 9 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 6/11, டி20 போட்டியில் 5/9 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் 3/36 என சிறந்த பந்துவீச்சை வைத்திருக்கும் சந்தீப் லமிச்சனே, மொத்தமாக 210 இண்டர்நேசனல் விக்கெட்டுகளையும், 13 ஐபிஎல் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 2018ஆம் ஆண்டு விளையாடினார்.

இந்நிலையில் நேபாளத்தின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவை பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை அன்று காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

17 வயது மைனர் பெண்ணை வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு!

23 வயதான சந்தீப் லமிச்சனே கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்ற நிலையிலும், ஜனவரி மாதம் நேபாள உச்சநீதிமன்றம் சந்தீப்பின் காவலை தளர்த்தியதால் அவர் நேபாள் அணியில் தொடர்ந்து விளையாடினார். இந்நிலையில் டிசம்பர் 29ம் தேதி மீண்டும் வழக்கு மறுவிசாரணைக்கு வந்த நிலையில், சந்தீப் லமிச்சனேவை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது காத்மண்டு மாவட்ட நீதிமன்றம்.

Sandeep Lamichhane
Sandeep Lamichhane

வழக்கின் விசாரணையில், காத்பண்டு மாவட்ட நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஷிஷிர் ராஜ் தாகல், லாமிச்சானே மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தார். இருப்பினும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர் மைனர் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனை தொடர்பான விசாரணை ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!

ஜனவரி 10ம் தேதியான நேற்று தண்டனை தொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், லமிச்சனேவை குற்றவாளி என உறுதிசெய்த காத்மண்டு நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 3 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்டவருக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இடைநீக்கம் செய்த நேபாள கிரிக்கெட் வாரியம்!

நீதிமன்றத்தால் சந்தீப் லாமிச்சனேவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது நேபாள கிரிக்கெட் வாரியம். அந்த அறிக்கையின் படி, “சந்தீப் லாமிச்சனே குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் நடவடிக்கைகளில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்று நேபாள கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Sandeep Lamichhane
Sandeep Lamichhane

இந்நிலையில் தற்போது கரிபீயன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடிவரும் லாமிச்சனேவை, அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து காத்மண்டு திரும்பிய லாமிச்சனேவை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது. தண்டனை குறித்து பேசியிருக்கும் லாமிச்சனே தரப்பு, இது சந்தீப் மீது சுமத்தப்பட்ட சதி என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com