RANJI FINAL: பொறுப்பில்லாமல் ஆடிய கேரளா கேப்டன்.. சதம் விளாசிய கருண் நாயர்! வெற்றிபாதையில் விதர்பா!
கடந்த அக்டோபர் 10-ம் தேதி தொடங்கிய 2024-2025 ரஞ்சிக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இரண்டு முறை ரஞ்சிக்கோப்பை வென்ற விதர்பா அணியானது, கடந்த முறை இறுதிப்போட்டிவரை முன்னேறி மும்பை அணியிடம் தோற்று ரன்னராக முடித்தது.
அதேபோல 1951-க்கு பின் 74 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற கேரளா அணி, தங்களுடைய முதல் ரஞ்சிக்கோப்பை வெற்றிக்காக களம்கண்டது.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற விதர்பா அணி சாதகமான சூழலை எட்டியுள்ளது.
கையில் இருந்த போட்டியை கோட்டைவிட்ட கேரளா கேப்டன்..
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி, டேனிஷ் மாலேவாரின் 153 ரன்கள் மற்றும் கருண் நாயரின் 86 ரன்கள் உதவியால் 379 ரன்களை குவித்தது.
விதர்பாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய கேரளா அணி 324/ 6 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் சிறப்பாக விளையாடியது. கேரளா கேப்டன் சச்சின் பேபி 98 ரன்களில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நிலைத்து நின்று விளையாடினார்.
ஆனால் அதுவரை சிக்சரே அடிக்காமல் 235 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் விளையாடிய சச்சின் பேபி, பொறுப்பற்ற முறையில் சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறியதை தொடர்ந்து அடுத்த 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த கேரளா அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் வாய்ப்பை தவறவிட்டு 342 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
ரஞ்சிக்கோப்பை நாக்அவுட் விதிகளின் படி 5 நாட்கள் கொண்ட போட்டி சமனில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டும்.
இந்நிலையில் 37 ரன்கள் முன்னிலைபெற்ற விதர்பா அணி வெற்றியின் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
சதம் விளாசிய கருண் நாயர்..
37 ரன்கள் பின்தங்கினாலும் 4வது மற்றும் 5வது நாள் ஆட்டம் மீதமிருந்ததால் கேரளா அணி பந்துவீச்சில் கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நீடித்தது. அதற்கேற்றார் போல் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய கேரளா அணி, விதர்பாவின் தொடக்க வீரர்களை விரைவாகவே வெளியேற்றி 7 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது.
ஆனால் அதற்குபிறகு ஜோடி சேர்ந்த டேனிஷ் மாலேவார் மற்றும் கருண் நாயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்டு எடுத்துவந்தனர். ரிதமை இழந்த கேரளா அணி கேட்ச்களையும் கோட்டைவிட்டு போட்டியை விட்டு வெகுதூரம் சென்றது.
மலேவார் அரைசதமடித்து வெளியேற, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கருண் நாயர் முக்கியமான நேரத்தில் சதமடித்து 132 ரன்களுடன் விளையாடிவருகிறார். விதர்பா அணி 4வது நாள் ஆட்டம் முடிவில் 288 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டி சமனில் முடியும் பட்சத்தில் விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சிக்கோப்பையை தட்டிச்செல்லும்.