ரஞ்சிக் கோப்பை | 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபைனலுக்குள் நுழைந்த கர்நாடகா!
ரஞ்சிக் கோப்பை தொடரில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. உத்தரகாண்ட்டுக்கு எதிரான போட்டி டிரா ஆனபோதும், ரன் ரேட் அடிப்படையில் கர்நாடக அணி தகுதி பெற்றது. இவ்வணி, ஜம்மு காஷ்மீரை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவருகிறது. பரபரப்பாக நடந்துவந்த ரஞ்சிக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. காலிறுதிப்போட்டியில் அபாரமாக வெற்றிபெற்ற ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் பெங்கால் அணிகள் அரையிறுதிப் போட்டியை எட்டின. அரையிறுதிப் போட்டியிலும் அசத்திய ஜம்மு-காஷ்மீர் அணி, பெங்கால் அணியை வீழ்த்தி வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தது. கடந்த 67 ஆண்டுகளில் முதல்முறையாக, அதிலும், இரண்டு முறை சாம்பியனான பலம் வாய்ந்த வங்காள அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இதனால் ஜம்மு காஷ்மீர் அணிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மறுபுறம், ஜம்மு காஷ்மீர் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது யார் என்ற பந்தயத்தில் கர்நாடகாவும் உத்தரகாண்ட்டும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியில் தேவ்தத் படிக்கல் 232 ரன்கள், கேஎல் ராகுல் 141 ரன்கள், ஸ்மரன் ரவிச்சந்திரன் 135 ரன்கள் என அடித்தளம் அமைத்துக் கொடுக்க அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 736 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இரண்டாவது இன்னிங்ஸைக் கர்நாடக அணி தொடர்ந்தது. 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணி 323 ரன்கள் குவித்தது. மொத்தத்தில் அந்த அணி, 1,059 ரன்களைக் குவித்தது. இதில் உத்தரகாண்ட் முதல் இன்னிங்ஸ் 233 ரன்கள் எடுத்த நிலையில், அவ்வணிக்கு 826 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அவ்வளவு பெரிய ஸ்கோரை எடுக்க முடியாது என நினைத்த உத்தரகாண்ட், ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடியது. அதன்படி, போட்டியும் டிராவானது. ஆனால், கர்நாடகாவின் ரன்ரேட்டால், அது ரஞ்சிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இவ்வணி, ஜம்மு காஷ்மீரை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது.

