சூறாவளியாய் சுழன்ற வைபவ்.. குவாலிஃபயர் 2-இல் நுழைந்த RR!
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றதுடன், 2ஆவது குவாலிபயரில் குஜராத்தை எதிர்கொள்கிறது.
2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. அதன்படி, முதலாவது பிளேஆப் போட்டியில் குஜராத்தைச் சுருட்டி, பெங்களூரு நேரிடையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த ஹைதராபாத் அணி, ராஜஸ்தானை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணை, ஆரம்பமுதலே அதிரடி காட்டியது.
அதிலும் வைபவ் சூர்யவன்ஷி சூறாவளியாய் மாறினார். 16 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த அவர் 29 பந்துகளில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 12 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடக்கம். ஜெய்ஸ்வால் 29 ரன்கள் எடுக்க, துருவ் ஜூரல் 50 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் ஹைதராபாத் அணி தொடரிலிருந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ளும்.

