பயிற்சி ஆட்டம்| சஞ்சு சாம்சனை கழற்றிவிட்ட இந்தியா.. இஷான், திலக் அதிரடி! 240 ரன்கள் குவிப்பு!
2026 டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு 240 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா அதிரடி பேட்டிங்கில் மிரட்டினர். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், இந்திய அணி தங்கள் திறமையை நிரூபித்தது.
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில், பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 20 அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.
இந்தசூழலில் போட்டி இன்னும் 2 நாட்களில் தொடங்கவிருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டங்கள் நடந்துவருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் தென்னாப்பிறிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
240 ரன்கள் குவித்து வென்ற இந்தியா!
இன்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அபிஷேக் சர்மா உடன் இஷான் கிஷன் ஓபனராக களமிறங்கினார். இரண்டு பேரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இஷான் கிஷன் 20 பந்தில் 7 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதமடித்தார். தொடர்ந்து வந்த திலக் வர்மாவும் 19 பந்தில் 45 ரன்கள் அடித்து மிரட்டினார்.
சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா அனைவரும் அதிரடி காட்ட 20 ஓவரில் 240 ரன்கள் குவித்தது இந்தியா. சஞ்சு சாம்சனுக்கு கடைசிவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இரண்டாவதாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ரம், ரிக்கல்டன் இருவரும் அதிரடி காட்டினர். ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ யான்சன் இருவரும் மிரட்டிவிட்டனர். 20 ஓவரில் 210 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் 9 பேர் பந்துவீசினர்.

